மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: நாளை ஒடுக்கு பூஜை

ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து ஒடுக்கு பதார்த்தங்கள் பவனியைத் தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.

கன்னியாகுமரி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கடைசி நாளான நாளை ஒடுக்கு பூஜை நடக்கிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 1ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அம்மன் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் சந்தனகுடம் பவனி, பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து சந்தனகுடம், காவடி மற்றும் தையம் பவனி நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சார்பில் சந்தனகுடம் பவனி, இரவு 10 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி நடைபெறுகிறது.

விழாவின் நிறைவு நாளான (பத்தாம் நாள்) நாளை அதிகாலை 2 மணிக்கு பால்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, 4.30 மணிக்கு அடியந்திரபூஜை, 6 மணிக்கு பூமாலை, 7 மணி முதல் குத்தியோட்டம், இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி, 11.30 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து ஒடுக்கு பதார்த்தங்கள் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நாளை அதிகாலை நடக்கும் அடியந்திர பூஜையைத் தொடர்ந்து அடைக்கப்படும் திருநடை, மாலை 5 மணிக்குதான் திறக்கப்படும். காலை 4.30 மணிக்குமேல் கோவிலுக்குள் எந்த பூஜையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கு பூஜை நடந்து கொண்டிருக்கும்போதே திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.