உண்ணாமலை கடையிலிருந்து சந்தனக்குட பவனி 
ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா.. சந்தன குடம் பவனி

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெறுகிறது.

கன்னியாகுமரி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழா கடந்த 1ம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் மூன்றாம் நாள் முதல் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினசரி மாலையில் சந்தனகுடம் பவனி, காலை, மதியம், மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

ஆறாம் நாள் இரவு 12.30 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு உண்ணாமலை கடை கீழத்தெரு பட்டாரியார் சமுதாயம் சார்பில் சந்தன குடம் பவனி புறப்பட்டு இரணியல், திங்கள்நகர், கல்லுக்கூட்டம், லெட்சுமிபுரம் வழியாக கோயிலை அடைந்தது. இரவு 10 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் பத்தாம் நாளான இன்று காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜையுடன் திருநடை அடைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து ஒடுக்கு பூஜைக்கு அம்மனுக்கு படைக்கப்படும் உணவு பதார்த்தங்கள் பவனியாக எடுத்து வரப்பட்டு, 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.