கள்ளழகர் 
ஆன்மிகம்

கள்ளழகர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா: 1-ந் தேதி தொடங்குகிறது

கள்ளழகர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 3-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும்.

மதுரை:

அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் மாசி பௌர்ணமி தினத்தில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி 2-ந் தேதி கஜேந்திர மோட்ச விழா மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 3-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று சந்திர கிரகணம் நிகழ்வதால் முன்னதாக காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் சகல பரிவாரங்களுடன் அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.

சுவாமியை பொய்கைகரைப்பட்டி கிராம மக்கள் வரவேற்று வணங்குவார்கள். தொடர்ந்து அன்று காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் தெப்ப உற்சவம், வழக்கம்போல் பூஜைகளுடன் நடைபெறும்.

மேலும் தெப்பக்குளம் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் மீண்டும், அங்கிருந்து வந்த வழியாகவே கள்ளழகர் பெருமாள் புறப்பாடாகி பகல் 12 மணிக்குள் திரும்ப கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேருகிறார்.