மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக திருத்தேர் திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் விநாயகர் தேர், அம்மன் தேர் வீதியுலா நடைபெற்றது. மார்ச் 1-ம் தேதி பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நேற்று இரவு சத்தாபரணம் விழாவையொட்டி பத்ரகாளியம்மன் தாய் வீடான பொங்கபாலியில் பத்ரகாளியம்மன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
பின்பு அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.