தென்திருப்பேரை,
நவதிருப்பதி தலங்களில் 9வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 26ம் தேதி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும் மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.
கடந்த 9ம் நாள் விழா தேர் திருவிழாவில் நம்மாழ்வார் தேரில் எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலித்தார்.10ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் 7ம் தேதி இரவு நடைபெற்ற தெப்ப திருவிழாவில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
11ம் நாள் திருவிழாவான நேற்று 8ம்தேதி தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் உடன் உடையவர், கூரத்தாழ்வான், பிள்ளை லோகாச்சாரியார், மணவாள மாமுனிகள், தேசிகர் ஆச்சாரியர்களுடன் கருடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். தெப்ப குளத்தின் கரையோரங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
12ம் திருவிழாவான இன்று 9ம் தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளான நாளை 10-ம் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார்திருநகரி திரும்புகிறார்.
நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் சதீஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, அர்ச்சகர்கள் கண்ணன், பாலாஜி, கோவிந்தன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.