ஆன்மிகம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பால்குடம்- காவடி ஊர்வலம்

தைப்பூச திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் 1000 ஆண்டு பழமையான கோவில்ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. குகன் என்ற முருகக்கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை இங்கு வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று.

இந்த கோவில் மூலஸ்தான கருவறையில் அமைந்து உள்ள சிவலிங்கம் ஐந்தரை அடி உயரம் கொண்டதாகும்.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி -தெய்வானையுடன் வீற்றிருக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சாஸ்தா சன்னதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் சுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானைக்கு எண்ணெய், பால், மஞ்சள் பொடி, மா பொடி, பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது.

Also read:தைப்பூச ஜோதி தரிசன விழா

அதன்பிறகு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.