காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் நடைபெற்ற நிலையில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா உற்சவம் நடைபெறாமல் நின்றிருந்தது.
கோவில் திருப்பணிகள் முடிந்து கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. எனவே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா உற்சவம் நடைபெறுகிறது. அதன்படி பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முதல் நாளான நேற்று காலையில் சுவாமி பவளக்கால் சப்பரம் வாகனத்திலும், இரவு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் எழுந்தருளி ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
ஏப்ரல் 4-ந் தேதி வரை 14 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் பல்வேறு விதமான வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய உற்சவங்களாக மார்ச் 27-ந் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதி உலா, இரவு வெள்ளித் தேரோட்ட உற்சவமும், மார்ச் 31-ந் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவும், ஏப்ரல் 3-ந் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.