காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இன்று அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு மூலவருக்கு பால் தயிர் மஞ்சள் விபூதி முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு ரோஜா, சாமந்தி, சம்பங்கி மாலைகள் அணிந்து அலங்காரம் செய்யப்பட்டது. சண்முகருக்கு சத்ரு சங்கார திரிசதீ யாகமும் அர்ச்சனையும் நடைபெற்றது.
முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று திரளான பக்தர்கள் வல்லக்கோட்டைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர்வசதி, கழிப்பிட வசதிகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், கதம்பசாதம், நீர்மோர், பிரசாதங்களும் வழங்கப்பட்டன.