கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரர் 
ஆன்மிகம்

சீனிவாசமங்காபுரம் பிரம்மோற்சவம்: கற்பகவிருட்ச வாகனத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்

உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ' ராஜமன்னார்' அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன சேவைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை கற்பகவிருட்ச வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ' ராஜமன்னார்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கற்பகவிருட்ச வாகனத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை தலைமை நிர்வாக அதிகாரி வரலட்சுமி, உதவி நிர்வாக அதிகாரி கோபிநாத் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வாகன சேவைக்கு முன்னால் நடன குழுவினரின் பல்வேறு நாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிம்ம வாகனத்தில் சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் வீதியுலா வந்த காட்சி

கபிலேஸ்வரர் கோவில்

இதேபோல் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. உற்சவமூர்த்திகளான சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் வாகனங்களில் எழுந்தருளி திருப்பதி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அவ்வகையில் நேற்று இரவு சிம்ம வாகனத்தில் சோமாஸ்கந்த மூர்த்தி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், சூப்பிரெண்டு சந்திரசேகர் மற்றும் பிற அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.