திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

விடுமுறை தினம்... திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில், விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இந்நிலையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் காவடி எடுத்து வந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

வாகனங்கள் வருகை அதிகரிப்பு

அதிகாலை முதலே வெளியூர்களிருந்து வந்த சுற்றுலா பஸ்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் மலைக்கோவிலுக்கு சென்றதால் மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து வாகனங்கள் கோர்ட்டுக்கு பின்புறம் நிறுத்தப்பட்டு, கோவில் பஸ்கள் மூலம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஷுபம் திமான் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.