ஆன்மிகம்

தென்காசி: மலையான்குளம் ஸ்ரீராமர் கோவிலில் தை பெருந்திருவிழா சப்பர பவனி

தேர் போன்று பிரம்மாண்டமாக ஜோடிக்கப்பட்ட சப்பரத்தை இளைஞர்கள் தோளில் சுமந்து சென்றனர்.

தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் அருகே உள்ள மலையான்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் பெருந்திருவிழாவாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டின் தை பெருந்திருவிழா ஜனவரி 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, திரு ஏடு வாசிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

எட்டாம் திருவிழாவான 30 ஆம் தேதி இரவில் சந்தியாமடத்திலிருந்து பால்குட ஊர்வலம் எடுத்து வரப்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மலையான் குளம் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

31ஆம் தேதி அதிகாலையில் ஸ்ரீராமர் குதிரை வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிப்ரவரி 1-ஆம் தேதி மாலையில் பத்தாம் திருநாளை முன்னிட்டு பிரம்மாண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இரவில் மாபெரும் அன்னதர்மமும் இரவில் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Also read:ராமபிரான் வழிபட்ட ஜெகந்நாதர்

நேற்று (பிப்ரவரி 2) அதிகாலையில் ஸ்ரீ ராமர் கருட வாகனத்தில் வீதி உலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. தேர் போன்று பிரம்மாண்டமாக ஜோடிக்கப்பட்ட சப்பரத்தை இளைஞர்கள் தோளில் சுமந்து வீதி உலா சென்றனர்.

இதில் மலையான்குளம் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ராமரை வழிபட்டனர்.