திருக்கல்யாண கோலத்தில் ஜெனக நாராயண பெருமாள், தாயார் 
ஆன்மிகம்

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

விழாவின் 7-வது நாள் இரவு கோ ரதத்தில் சுவாமி தாயார் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சோழவந்தான்,

சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், வாகன வீதிஉலா நடைபெறுகிறது. அவ்வகையில் விழாவின் 7ம் நாளில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

திருக்கல்யாண வைபவத்திற்காக வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதி வழியாக கோவிலை அடைந்தனர். தொடர்ந்து மாப்பிள்ளை, பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் பட்டர்கள் யாக வேள்வி நடத்தி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோ ரதத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.