நாகை,
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கீழநாட்டிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள சியாமளாதேவி மாரியம்மன், வீரமாகாளியம்மன் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின்னர் பூக்குழி இறங்கும் நிகழ்வு தொடங்கியது. விரதம் இருந்த பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பால்குட ஊர்வலம், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
தீமிதி திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.