திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
11-ம் திருநாளான நேற்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 2 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதே போல் 2 மணிக்கு யாதவ மண்டபத்திற்கு சென்றடைந்த சுவாமி, அம்பாளுக்கு பட்டு சாத்தி வைக்கப்பட்டது. பின்னர் சந்திரகிரகணம் முடிந்த பின்னர் இரவு 8 மணிக்கு மேல் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு சென்றனர். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாரானை நடந்தது.
பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்ந்தனர். அங்கு இரவு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் வண்ண மலர்களாளும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளினார். பின்னர் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
12-ம் திருநாளான இன்று மாலையில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.