கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத சஷ்டியை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு பூஜையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பாலசுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே உள்ள பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தை மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர் . பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.