கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

மயிலாடுதுறை: காளகஸ்திநாதபுரம் கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் காமாட்சி அம்பாள் உடனாகிய கயிலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 10-ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை தொடங்கியது.

இன்று காலையில் யாகசாலை பூஜை நிறைவடைந்ததையடுத்து கடம் புறப்பாடு நடைபெற்றது. யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசத்தை தலையில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து, விமான கோபுரத்தை அடைந்தனர். பின்னர், மேள தாளங்கள் முழங்க வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத, சிவ ஆகம முறைப்படி, புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு புனித நீரை ஊற்றி மகா அபிஷேகம் செய்தனர். பின்னர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.