மஞ்சாலூமூடு பகுதியில் பொதுமக்களை சந்தித்து சாமுவேல் ஜார்ஜ் ஆதரவு திரட்டியபோது 
மாவட்ட செய்திகள்

விளவங்கோடு தொகுதியில் மண் சாலைகள் தரமான காங்கிரீட் சாலைகளாக மாற்றப்படும்; சாமுவேல் ஜார்ஜ் தேர்தல் வாக்குறுதி

விளவங்கோடு தொகுதியில் மண் சாலைகள் அனைத்தும் தரமான காங்கிரீட் சாலைகளாக மாற்றப்படும் என சாமுவேல் ஜார்ஜ் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் போட்டியிடுகிறார். இவருக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் தொகுதி முழுவதும் பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முழுக்கோடு, மூடோடு, மஞ்சாலுமூடு, மாங்கோடு பகுதிகளில் உள்ள போதகர்களையும், பொதுமக்களையும் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். மேலும் தனக்கு ஆதரவு தரும்படி மற்றவர்களிடமும் எடுத்துரைக்கும்படியும் தெரிவித்தார்.

பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:-

இலவச மருத்துவ முகாம்

இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன். படித்த இளைஞர்களுக்கு தங்களது தகுதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பேன். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் ஆகியோரின் வளர்ச்சிக்காக அரசு வங்கிகளில் இருந்து கடன் உதவி பெற்று கொடுக்கப்படும். மார்த்தாண்டத்தில் தனக்கு சொந்தமான மருத்துவமனையில் பொதுமக்களின் நலன் கருதி இலவசமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். காப்பீடு திட்டங்கள் மூலம் அறுவை சிகிச்சை உள்பட உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படும்.மண்சாலைகள் தரமான காங்கிரீட் சாலைகளாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.