திண்டுக்கல்:
தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் அப்துல்மாலிக் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் முபாரக்அலி முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறைப்படி விண்ணப்பம் பெறவேண்டும்.
இதேபோல் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாட்கள் வேலை திட்ட பணிகளை தெளிவுபடுத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உயிர் சான்று பெறும் முறையை கைவிட்டு வருவாய்த்துறை மூலம் சான்று பெறும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.