சென்னை,
தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக, அமமுக உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
.
இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ. 4 லட்சம் கோடி அளவிற்கு திமுகவினர் கொள்ளையடித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். திமுக கூட்டணி தடுமாற்றத்தில் உள்ளது.
திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மட்டுமே போட்டுவருகிறது. அவை நடைமுறைக்கு வரவில்லை. திமுக ஆட்சியின் ஆயுள்காலம் 2 மாதங்கள்தான். அதனால்தான் புதிய திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வருவோருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்தியாவிலேயே இவ்வளவு மோசமான ஆட்சி எங்கும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை நடப்பதை திமுக அரசு தடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்