மாவட்ட செய்திகள்

நாய் கடித்து சிறுவன் சாவு

தேவதானப்பட்டியில் நாய் கடித்து சிறுவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.

தேனி :

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. அவருடைய மகன் பாலகேஸ்வரன் (வயது 5). இவன், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தெருவில் 3 சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே சென்ற நாய் ஒன்று, சிறுவர்களை விரட்டியது. இதை பார்த்து சிறுவர்கள் அலறி அடித்து ஓடினர். அவர்களை விடாமல் அந்த நாய் விரட்டி கடித்தது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து நாயை விரட்டினர்.

நாய் கடித்ததில் பாலகேஸ்வரனின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவன், சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு நாய்கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அவனுக்கு 2 டோஸ் தடுப்பூசிகளை தேவதானப்பட்டி வட்டார சுகாதார மருத்துவமனையில் செலுத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில், பாலகேஸ்வரன் பரிதாபமாக இறந்தான். தெரு நாய் கடித்து, சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.