மாவட்ட செய்திகள்

தொப்பூர் அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு விவசாயி படுகாயம்

தொப்பூர் அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் இறந்தார். விவசாயி படுகாயம் அடைந்தார்.

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் இறந்தார். விவசாயி படுகாயம் அடைந்தார்.

டிராக்டர் கவிழ்ந்தது

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பப்பிரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (வயது 69). விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் தினேஷ்குமார் (23) ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இவர் டிராக்டரில் டேங்க் வைத்து அதில் தண்ணீர் நிரப்பி கொண்டு கம்மம்பட்டி கூட்டுறவு வங்கி அருகே வந்து கொண்டு இருந்தார்.

அப்போது சாலையோர 10 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் தண்ணீர் டேங்க்குடன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த சுந்தரவடிவேல் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சுந்தரவேலுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.