ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை, கொட்டக்குடி, சுருளி ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி வினாடிக்கு 1,860 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்றுக்காலை 6 மணி நிலவரப்படி வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,558 கனஅடியாக இருந்தது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 66.67 அடியாக உயர்ந்து உள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கும், மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சேடப்பட்டி பகுதியின் குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட கூடுதலாக நீர்வரத்து உள்ளதால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.