ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதன் நீர்மட்டம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 60 அடிக்கு மேல் நிரம்பி காணப்படுகிறது. வைகை அணையில் இருந்து மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், சேடப்பட்டி பகுதியின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் டவ்தே புயல் காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும், போடி கொட்டக்குடி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக வைகை அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
64 அடியை எட்டியது
இதையடுத்து வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்றுக்காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.71 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,081 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 4 ஆயிரத்து 351 மில்லியன் கனஅடியாக இருந்தது.