மாவட்ட செய்திகள்

ஊரடங்கு காலத்தில் காசிமேட்டில் மீன் விற்பனை செய்ய கட்டுப்பாடுகள்

ஊரடங்கு காலத்தில் காசிமேட்டில் மீன் விற்பனை செய்ய கட்டுப்பாடுகள் போலீசார் நடவடிக்கை.

திருவொற்றியூர்,

தமிழகத்தில் நாளை(10-ந்தேதி) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காய்கறி, மளிகை கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகளை காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரை திறந்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க கூட்டநெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்கு சென்னை வடக்கு மண்டல போலீஸ் கூடுதல் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் வடக்கு மண்டல இணை கமிஷனர் துரைகுமார், வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி ஆகியோர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஊரடங்கு காலத்தில் மீன் வாங்க கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த பைபர் படகில் பிடித்து வரும் மீன்களை, விசைப்படகுகள் கட்டும் தளத்தில் வைத்து ஏலம் விடுவதற்கு ஒரு இடமும், மீன்களை விற்பனை செய்வதற்கு ஓரிடமும் என தனித்தனியாக இடங்களை தேர்வு செய்து பிரித்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இதற்கு மீனவர்களும் ஒப்புதல் அளித்து முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தனர்.