மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தேனி அருகே விளம்பர தட்டி கட்ட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தேனி:

தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 35). இவர் விளம்பர தட்டிகள் வைக்கும் கூலி தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் இருந்து சிவாஜி நகர் செல்லும் சாலையோரம் உள்ள ஒரு கடையின் மேல் பகுதியில் நின்று கொண்டு அந்த கடையின் விளம்பர தட்டியை கட்டும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக செல்லும் மின்சார கம்பி அவர் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவருடைய மனைவி மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.