மானாமதுரை ரயில் நிலையத்திற்குள் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடந்தபோது எடுத்தபடம். 
மாவட்ட செய்திகள்

மானாமதுரை-மதுரை இடையே மின்மயமாக்க பணி:ரயில் நிலையத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்

மானாமதுரை-மதுரை இடையே ரயில்பாதை மின்மயமாக்கும் பணிகளுக்காக ரயில் நிலையத்திற்குள் மின்கம்பங்கள் வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ரெயில்பாதை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து மதுரை வரையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக மின்கம்பங்கள் அமைக்கும் பணி மானாமதுரை ரயில் நிலையத்தில் நடந்து வருகிறது. மதுரையில் இருந்து ராமேசுவரம் வரையிலும், மானாமதுரையில் இருந்து விருதுநகர் வரையிலும், மானாமதுரையில் இருந்து திருச்சி வரையிலும் மின்மயமாக்கும் பணியை ரயில்வே துறை செய்து வருகிறது.

இதில் மானாமதுரை வரை 48 கி.மீ. தூரமுள்ள பாதையை மின்மயமாக்கும் பணியினை கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே நிர்வாகம் தொடங்கிய நிலையில் மானாமதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரயில்பாதையின் ஓரமாக மின்கம்பங்கள் நடும் பணி நடந்து வந்தது.

மின்கம்பங்கள் நடும் பணி

இதற்காக இரும்பு மின்கம்பங்கள் தனி ரயிலில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் நிறுவும் பணி நடந்து வருகிறது. தற்போது மானாமதுரை ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் கிரேன் உதவியுடன் நடந்து வருகின்றது.