மாவட்ட செய்திகள்

என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

வெளிநாடு செல்ல விசா கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிங்காநல்லூர்

வெளிநாடு செல்ல விசா கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜப்பானில் வேலை

கோவை ஒண்டிப்புதூர் நாகையன் தோட்டத்தை சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 27). கணினி என்ஜினீயர். இவரது மனைவி இந்து (26). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கிஷோர் குமார் ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இதனிடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோவை திரும்பினார். இதன்பின்னர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவருக்கு மீண்டும் ஜப்பான் சென்று பணி புரிய அதிக ஆர்வம் காண்பித்து வந்தார். இதற்காக அவர் விசா கோரி விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு விசா கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலை

இதன்காரணமாக கடந்த சில நாட்களாக கிஷோர் குமார் மன வேதனையில் இருந்தார். மேலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முடியாதது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விரைந்து சென்று கிஷோர் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசேதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.