திருப்புவனம்,
கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால பானை ஓடு குவியல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி
தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றிவரும் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் முடிந்துள்ளன. தற்போது 7-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகையிலும், அகரத்திலும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கீழடியில் மொத்தம் 9 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டும் ஒரு குழி மட்டும் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டடி ஆழத்தில் தோண்டிய போது ஏற்கனவே பாசி மணிகள், சில்லு வட்டுக்கள், மற்றும் பானை ஓடுகள் கிடைத்தன. பிறகு மண்ணால் ஆன கூம்பு வடிவ கிண்ணம், மண் மூடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பானை ஓடுகள்
தற்சமயம் 4 அடி ஆழமாக தோண்டப்பட்ட நிலையில் பழங்கால பானை ஓடுகளின் குவியல்கள், கருங்கல் போன்ற அமைப்பும், கரித்துகள்களும் கிடைத்து வருகின்றன. தொடர்ந்து குழி ஆழமாக தோண்டி பணிகள் நடைபெறும் நேரத்தில் மேலும் கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.
கொந்தகையில் ஏற்கனவே அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்ற இடத்திற்கு கிழக்கே 2 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டும் ஒரு குழி பெரிய அளவில் அகலமாக தோண்டப்பட்டு வருகிறது. இதேபோல அகரத்திலும் குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.