கொல்லங்கோடு:
தேங்காப்பட்டணத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
படகு கவிழ்ந்து மீனவர் பலி
தேங்காப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 17-ந் தேதி காலையில் படகில் மீன்பிடிக்க சென்றுவிட்டு மாலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நுழைய முயன்றனர். அவர்கள் துறைமுக முகத்துவார பகுதியில் வந்த போது ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்தது. இதில் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இனையம்புத்தன்துறையை சேர்ந்த ஆன்டனி பிரிட்டன் ராஜா என்ற மீனவர் படகின் அடிப்பகுதியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு கேமரா காட்சி
இந்தநிலையில், தற்போது படகு அலையில் சிக்கி கவிழும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி உள்ளது. அதில் முகத்துவாரத்தில் 2 படகுகள் நுழைய முயல்கின்றன. அப்போது, ஒரு ராட்சத அலை எழுந்து படகுகள் மீது பயங்கரமாக மோதுகிறது. இதில் ஒரு படகு அலையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலைதடுமாறி கவிழ்கிறது. மற்றொரு படகு அலையில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி செல்கிறது.
இந்த வீடியா காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.