வெள்ளியணை ,
புலியூரில் உள்ள அரசு உதவி பெறும் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் கடந்த 29, 30-ந்தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கு கரூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஏழு தலைப்புகளில் மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்திய இந்த அறிவியல் கண்காட்சியில் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சுகந்த் மற்றும் தீபக்கண்ணன் ஆகியோர் தங்களின் படைப்புகளையும் காட்சிபடுத்தியிருந்தனர். இதில் சுகந்த் காட்சிப்படுத்திய நம்மை சூழ்ந்திருக்கும் உயிரின உலகம் என்ற தலைப்பிலான படைப்பு முதல் பரிசை பெற்றது. இதனையடுத்து மாணவர் சுகந்திற்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமிர்தலிங்கம் கலந்துகொண்டு மாணவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.