கரூர் 
மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பலி

கிருஷ்ணராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணராயபுரம்,

வேன் மோதல்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 70). விவசாயியான இவருக்கு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சேவகன் கிராமத்தில் சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. இதனால் ஆண்டியப்பன் தினந்தோறும் தனது மோட்டார் சைக்கிளில் வந்து தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்வது வழக்கம்.இந்தநிலையில் வழக்கம்போல், கடந்த 14-ந் தேதி ஆண்டியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மாயனூர் ரெயில்வே கேட் அருகே உள்ள காட்டூர் சாலையில் செல்வதற்காக ஆண்டியப்பன் தனது மோட்டார் சைக்கிளை திரும்ப முயன்றார். அப்போது பின்னால் வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக, ஆண்டியப்பன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விவசாயி பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆண்டியப்பன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ஆண்டியப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.