பொறையாறு:-
செம்பனார்கோவில் பகுதியில் உளுந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், போதிய மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உளுந்து சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் உள்ளது.
அந்தவகையில் தரங்கம்பாடி, பொறையாறு, திருக்களாச்சேரி, தில்லையாடி, திருவிடைகழி, விசலூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், நல்லாடை, திருவிளையாட்டம், மேமாத்தூர், பரசலூர், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம், கீழையூர், மேலையூர், ஆறுபாதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்கு பிறகு கோடை கால பயிராக உளுந்து சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
மகசூல் குறைந்தது
உளுந்து பயறு அறுவடைக்கு தயாராக இருந்தநிலையில் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது. மழையின் காரணமாக உளுந்து பயறுகளை அறுவடை செய்ய முடியாததால் பெரும்பாலான செடிகள் அழுகி விட்டன. தற்போது வெயில் அடிப்பதால் செம்பனார்கோவில் அருகே காலகஸ்திநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து பயறு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், போதிய மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், நெல் அறுவடைக்கு பிறகு உளுந்து சாகுபடி செய்து இருந்தோம். அறுவடை சமயத்தில் திடீர், திடீரென மூன்று முறை மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து செடிகள் அழுகி விட்டன.
மீதமுள்ள உளுந்து செடிகளை அறுவடை செய்து வருகிறோம். மழையால் பெரும்பாலான செடிகள் அழுகி விட்டதால் போதியளவு மகசூல் கிடைக்கவில்லை. இதனால், நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இதனை அதிகாரிகள் கணக்கெடுத்து உரிய இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றனர்.