மாவட்ட செய்திகள்

27–வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி பலி தானேயில் பரிதாபம்

தானேயில் 27–வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

தானே,

தானேயில் 27வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

தானே ஹிராநந்தனி மீடவுஸ் பகுதியில் உள்ள மேபேர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 27வது மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த மாணவி ஜோதி சர்மா (வயது17). அதே பகுதியில் உள்ள வசந்த் விகார் கல்லூரியில் படித்து வந்தார்.

மாணவி ஜோதி சர்மா நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தன் வீட்டின் ஜன்னல் பகுதியில் காயப்போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்ததார். அப்போது திடீரென நிலைதடுமாறிய அவர் துரதிருஷ்டவசமாக தடுப்புக்கம்பி இல்லாத அந்த ஜன்னல் வழியாக மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதில் கீழே விழுந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஜோதி சர்மா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி உண்மையிலேயே தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஏதேனும் மனஉளைச்சல் காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.