மாவட்ட செய்திகள்

பொன்னை அருகே பெண் போலீஸ் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

பொன்னை அருகே பட்டப்பகலில் பெண் போலீஸ் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

திருவலம்

பொன்னை அருகே பட்டப்பகலில் பெண் போலீஸ் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் போலீஸ் வீட்டில் திருட்டு

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள பரமசாத்து, சித்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெனீஷ்குமார் (வயது 34). ராணிப்பேட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனகா. இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியில் போலீசாக வேலைப்பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

மாலையில் வேலை முடிந்து போலீஸ்காரர் கனகா, தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து இருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கனகா இது குறித்து கணவருக்கு தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் துணிகரம்

பின்னர் இது குறித்து பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் திருட்டு குறித்து விசாரித்தனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற பிறகு பட்டப்பகலில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர் நபர்கள் உள்ளே சென்று பீரோ சாவியை எடுத்து பீரோவைத் திறந்து, உள்ளே இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை திருடி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டிலிருந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் வேலூரிலிருந்து மோப்ப நாய் சிம்பா வரவைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த பகுதியில் அங்குமிங்கும் சுற்றியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த திருட்டு குறித்து பொன்னை போலீசார் விசாரணை நடசத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பூட்டி இருந்த, பெண் போலீசின் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு போயிருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.