மாவட்ட செய்திகள்

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்கள்-அரங்குகளுக்கு அபராதம்; மாநகராட்சி நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்பட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளம் மூலமாக முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் கூடங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மண்டல அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாநகராட்சி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 306 நிகழ்ச்சி நடைபெறும் கூடங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் 21 இடங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத மற்றும் 100 பேருக்கு மேல் கூடிய திருமண மண்டபங்களில் ரூ.21,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மொத்தம் 1,417 நிகழ்ச்சி நடைபெற்ற கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு 121 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு ரூ.1,33,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.