மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில் தீத்தடுப்பு பயிற்சி

பழனி முருகன் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.

பழனி:

பழனி முருகன் கோவிலில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. குடமுழுக்கு மண்டபத்தில் நடந்த முகாமுக்கு பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

பழனி தீயணைப்புதுறை அலுவலர் ஆண்டவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு தீத்தடுப்பு குறித்து பயிற்சி அளித்தனர். குறிப்பாக தீப்பிடித்தால் தண்ணீரை கொண்டு அணைப்பது குறித்தும், காற்றை தடைசெய்து தீயை அணைப்பது குறித்து செய்து காட்டினர்.

இந்த முகாமில் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் பயிற்சி பெற்றனர். தொடர்ந்து கியாஸ் கசிவை தடுக்கும் முறை, தீ விபத்து காலங்களில் செயல்படும் விதம், மயக்கமடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை, உயரமான இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் முறைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.