மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புதிதாக 302 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 23 ஆயிரத்து 539 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்து 654 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது வரை 155 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய பெண், 58 வயதுடைய பெண் மற்றும் 66 வயதுடைய மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

160 ஆக உயர்வு

இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 160 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.

இதில் புதிதாக 302 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 539-ல் இருந்து 23 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளது.