புதுச்சேரி
திருபுவனை மெயின்ரோடு சிலோன் குடியிருப்பை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது27). இலங்கை அகதியான இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு 2 கால்களும் செயல் இழந்தன. இதையடுத்து தனக்கு இழப்பீடு கேட்டு கூடுதல் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து அவருக்கு ரூ.30 லட்சத்து 53 ஆயிரம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இருப்பினும் காப்பீடு நிறுவனம் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. தொடர்ந்து தீர்ப்பாயத்தில் நிறைவேற்றுதல் மனுவை ஜீவரத்தினம் கார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கூடுதல் சார்பு நீதிபதி முத்துமுருகன் காப்பீடு நிறுவன சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடாந்து புதுவை சாரம் 45 அடி சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துக்கு இன்று காலை கோர்ட்டு அமினா வெங்கட் சென்று ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவருடன், விபத்தில் பாதிக்கப்பட்ட ஜீவரத்தினம், அவரது வக்கீல் அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆனால் காப்பீடு நிறுவன அதிகாரிகள் இழப்பீடு தொகை வழங்க ஒரு வார கால அவகாசம் அளிக்குமாறு கேட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதால் அவகாசம் தர முடியாது என தெரிவித்தனர். ஆனால் காப்பீடு நிறுவன ஊழியர்கள் ஜப்தி செய்ய அனுமதிக்கவில்லை. இதையடுத்து தீர்ப்பாய உத்தரவை நிறைவேற்ற போலீஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறிவிட்டு சென்றனர்.