மாவட்ட செய்திகள்

பரோட்டா கடை உரிமையாளரை காரில் கடத்திச் சென்று தாக்குதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் வாங்கிய கடனை திருப்பி தர மறுத்ததால் பரோட்டா கடை உரிமையாளரை, நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.

தூத்துக்குடி, சுந்தரராமபுரத்தைச் சேர்ந்த ஜவஹர்சாதிக் (வயது 40), அந்த பகுதியில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். இவர் தொழிலை விருத்தி செய்வதற்காக நிதி நிறுவனம் நடத்தி வரும் அண்ணாநகர் 4-வது தெருவைச் சேர்ந்த சங்கர்(43) என்பவரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளதாகவும், அதனை அவர் திருப்பிச் செலுத்தாமல், வட்டியும் கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர், கார் டிரைவர் பேச்சிமுத்து, ஊழியர்கள் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(34), சுந்தரராமபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாரிமுத்து(43) ஆகிய 4 பேரும் காரில் சென்று ஜவஹர்சாதிக்கிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால், அவரை காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் ஜவஹர்சாதிக்கை மீட்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன அதிபர் சங்கர், கார் டிரைவர் பேச்சிமுத்து, நிதி நிறுவன ஊழியர்கள் மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.