மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு

முழு ஊரடங்கு எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் செறிச்சோடியது.

கரூர்

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிற நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலானது. கரூர் ஜவகர்பஜார், காந்திகிராமம், வெங்கமேடு, தாந்தோணிமலை பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகள் துணி கடைகள், பாத்திரகடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மெடிக்கல், மருத்துவமனை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் திறந்திருந்தன. பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள், வாடகைகார்கள் எதுவும் இயங்கவில்லை.

கண்காணிப்பு

கரூர் சுங்ககேட், திருமாநிலையூர், பஸ் நிலையம், சர்ச்கார்னர், பைபாஸ் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். ஊரடங்கு உத்தவை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தும் வாகனங்களை பரிமுதல் செய்தனர். ஆம்புலன்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்கள். வங்கி ஊழியர்கள் மட்டும் அவ்வப்போது வாகனத்தில் சென்றதை காண முடிந்தது. இதனால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.