மும்பை

சைனீஸ் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

மும்பை, 

தாராவி மாட்டுங்கா லேபர்கேம்ப், ஆனந்த்நகர் பகுதியில் எம்.எஸ்.இ.பி. கேட் எதிர்புறத்தில் சைனீஸ் ஓட்டல் உள்ளது. நேற்று அதிகாலை நேரத்தில் சைனீஸ் ஓட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. கியாஸ் கசிவு ஏற்ப்பட்டதை உணர்ந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ஓட்டல் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் மக்களை உஷார்படுத்தினர். இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர். மேலும் சைனீஸ் ஓட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. சிலிண்டர் வெடித்ததில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. ஓட்டல் அருகில் உள்ள 5 கடைகள் சேதமடைந்தன. சிலிண்டர் வெடித்த போது சிதறிய கற்கள் தாக்கியதால் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த 4 பேர் லேசான காயமடைந்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த ஓட்டலில் ஆய்வு செய்தனர்.