நாகூர்:-
நாகூர் அருகே விஷம் கலந்த தீவனத்தை தின்ற 10 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதுதொடர்பாக கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்விரோதம்
நாகை மாவட்டம் நாகூர் அருகே தெத்தி கிராமத்தை சேர்ந்தவர் ஹபீப்கனி. இவர் தனது வீட்டில் 26 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அப்பாஸ்அலி என்பவருடைய வீடு அருகே ஆடுகள் அடிக்கடி மேய சன்றதாக தெரிகிறது. இதனால் 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஹபீப்கனி வளர்த்து வந்த 10 ஆடுகள் அடுத்தடுத்து இறந்தன. இதுகுறித்து ஹபீப்கனி நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விஷம் கலந்த தீவனத்தை தின்றதால் ஆடுகள் இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அபாஸ்அலி, அவருடைய மனைவி மும்தாஜ் பேகம் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
உயிரிழந்த ஆடுகள் பரிசோதனைக்காக தஞ்சையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தெத்தி கிராமத்தில் 10 ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.