மாவட்ட செய்திகள்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.6¼ லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள், அவரது உடைமைகளை சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அதே விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்க வரித் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணி, அவரது உடைமைகளை சுங்க வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அதில், அந்த பயணி கொண்டு வந்த பார்சல்களுக்கு நடுவே மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 127 கிராம் எடையுள்ள தங்கத்தை, சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6.27 லட்சம் ஆகும். விசாரணையில் அவர் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த பயணி என்பதும், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர், பஜ்பே போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பேரில் அவரை, பஜ்பே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.