மாவட்ட செய்திகள்

அரசு பொருட்காட்சி 9-ந்தேதி தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அன்பழகன் ஆய்வு

கரூர் அரசு பொருட் காட்சி வருகிற 9-ந் தேதி தொடங்குவதை யொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இந்த ஆண்டிற்கான அரசு பொருட்காட்சி வருகிற 9-ந்தேதி அன்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கப்பட இருக்கிறது. இதையொட்டி அங்கு அனைத்து அரசுத்துறைகளின் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

கலெக்டர் பேட்டி

அதன் பின்னர் கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், கரூரில் வருகிற 9-ந்தேதி அன்று அரசு பொருட்காட்சியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். 45 நாட்கள் இந்த பொருட்காட்சி நடைபெறும். அரசு திட்டங்களை எப்படி பெறுவது? என்பன உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் ஊரகவளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 27 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுகளும், தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

பயன்பெறலாம்

அரசு பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர் களுக்கு ரூ.10-ம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.5-ம் என வசூலிக்கப் படும். இதனை கண்டுகளித்து பொதுமக்கள் பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தஆய்வின் போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி க.பாவேந்தன், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராஜேந்திரன், வேளாண்மை துணை இயக்குனர் உமாராணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜவேல், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார், கரூர் வட்டாட்சியர் அமுதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.