அரவக்குறிச்சி
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முதன்மையான தேர்வாகும். இத்தேர்வானது மனத்திறன், படிப்பறிவுத் திறன் என இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதனை 8-ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் எழுதுவார்கள். கொரோனா காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் அரவக்குறிச்சி அருகே அ.வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் ம.சகாயநாதன் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளதால் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 9-ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ரூ.48 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இத்தேர்வில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவரை வட்டாரக்கல்வி அலுவலர்கள் சித்ரா, விஜயகருணாகரன், தலைமையாசிரியர் சாகுல் அமீது மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.