கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38). லாரி ஓட்டி வருகிறார். இவர் சிங்கையன்புதூர் கல்லுக்குழி முத்தூர் சாலையில் லாரியை ஓட்டிச் சென்றார்.
அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி ஆறுமுகம் லாரி மீது நேருக்கு நேர் மோதியது. லாரியின் முன்பகுதி அப்பளம்போன்று நொறுங்கியது. அத்துடன் ஆறுமுகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.