தானே,
தானேயில் நேற்று கனமழை பெய்தது. இதில் மரம் வேரோடு சாய்ந்ததில் 9 வாகனங்கள் நொறுங்கின.
மரம் சாய்ந்தது
தானே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இதன்காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மேலும் பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது. கனமழை மற்றும் வேகமான காற்றின் காரணமாக தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் பெரிய மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 7 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு டேங்கர் லாரி ஆகியவை நொறுங்கி சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வேரோடு சாய்ந்த மரத்தை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
மழை அளவு
இதேபோல கல்யாண் டவுன்சிப் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தானே மாநகராட்சியில் பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரையிலான 2 மணி நேரத்தில் மட்டும் 2.46 செ.மீட்டர் மழை பதிவானது. இதேபேல மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை 1.65 செ.மீட்டர் மழை பெய்தது. தானேயில் கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 325 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.