நாகப்பட்டினம்:
நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்.சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், வாழையடி, வாழையாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம் என்பதை உணர்த்தும் வகையிலும் வாழை கன்றுகளை நடுவில் வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.