மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் 8-ந் தேதி (நாளை) வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் முன்மண்டபத்தில் பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. வடக்கு ரத வீதி மற்றும் தெற்கு ரத வீதி வழியாக வரும் பாதையிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோவிலுக்கு வெளியே நின்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோவில் முன்மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றவும், கோவிலை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நகர இந்து முன்னணி சார்பில் தாலுகா அலுவலக வாயில் முன்பு மாவட்ட செயலாளர் ஆறுமுகச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக அலுவலக வாயிலில் துர்க்கை வேடமணிந்து நின்ற பெண் மாவிளக்கு எடுத்தும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.