மாவட்ட செய்திகள்

எடமலைப்பட்டிபுதூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெண்களுக்கு பிரசவகால சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான வேளைகளில் அங்கு டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்களே பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதாகவும், அதனால், சிலவேளைகளில் அசம்பாவிதம் நேரிட வாய்ப்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் நேற்று காலை எடமலைப்பட்டிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்ப்பதை கைவிட்டு, டாக்டர்கள் தலைமையில் பிரசவம் பார்க்க வேண்டும். அங்கு 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படி டாக்டர்களை நியமிக்க வேண்டும். நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வழங்க வேண்டும். தடுப்பூசிகளை முறையாக போட வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டத்துக்கு அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலாளர் வெற்றிச்செல்வன், கிளை செயலாளர் சதாசிவம், லெனின், கணேசன் உள்ளிட்டவர்கள் கோரிக்கையை விளக்கி பேசினார்கள். இதில் லதா, ராஜேஸ்வரி, ரவி, ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாய அன்பரசு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இந்த பேச்சுவார்த்தையின்போது ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் எழில்நிலவனும் கலந்து கொண்டார்.

அப்போது போலீசார் தரப்பில், உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். அதை உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.